

பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகர பகுதிகளில் உள்ள உணவகங்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் காலாவதியான பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுப்புராஜ், செல்வபாண்டியன், காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பஸ் நிலையம், பாலக்காடு ரோடு, ராஜாமில் ரோடு, மார்க்கெட் ரோடு உள்பட நகரின் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும், காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில் பொள்ளாச்சி நகரில் 54 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 18 கடைகளில் இருந்து 22 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உணவு பொருட்கள் குறித்த விவரங்கள் இல்லாத 39 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பதிவு சான்றிதழ் பெறாத 2 கடைகளுக்கு பதிவு உரிமம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குளிர்பானங்கள் அழிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.