

ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 7-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல்களை 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்ட 45 பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சியில் 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சுற்றுலா வாகனங்கள் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள்.
நீலகிரியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.37 லட்சத்து 60 ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.