தேர்தல் பணிகளை கவனிக்க தனி போலீஸ் படை

புதுவையில் காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் பணிகளை கவனிக்க தனி போலீஸ் படை
Published on

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளை கவனிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனி போலீஸ் படையின் பொறுப்பாளராக கடலோர பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் இன்ஸ்பெக்டர்கள் ரகுநாயகம், சஜித், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரப்பன், ஏட்டுகள் ஏழுமலை, லியாகத் அலி மற்றும் 9 போலீசார், 4 ஊர்க்காவல் படையினர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், கூடுதல் பாதுகாப்பினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். அன்றாடம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். இதற்கான உத்தரவினை போலீஸ் தலைமையக சூப்பிரண்டு செல்வம் பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று மாலை ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் பகுதியில் அணிவகுப்பு நடத்தினர். அப்போது அவர்கள் அந்த பகுதிகளில் உள்ள வீதி வீதியாக நடந்து சென்றனர். இது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை பொதுமக்களுக்கு உணர்த்துவதாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com