அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் குடிசை அமைத்து நள்ளிரவில் மணல் கடத்தல்

அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றின் நடுவில் குடிசை அமைத்து நள்ளிரவில் மணல் கடத்தல் நடந்து வருகிறது.
அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் குடிசை அமைத்து நள்ளிரவில் மணல் கடத்தல்
Published on

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி கதவணை மின் நிலையத்துக்கும், கோவில்பாளையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் நடுவில் மணல் திட்டு உள்ளது.

இந்த மணல் திட்டின் ஒரு புறம் ஈரோடு மாவட்டமும், மறுபுறம் சேலம் மாவட்டமும் அமைந்துள்ளது. இந்த மணல் திட்டுக்கு பரிசலில்தான் செல்ல முடியும். மணல் திட்டில் பரவலாக மணல் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த மணலை திருடுவதற்காக மர்ம நபர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

குடிசை அமைத்து...

மணல் திட்டின் மறுபுறம் உள்ள சேலம் மாவட்டத்தின் கோம்புக்காடு வழியாக மர்ம நபர்கள் பரிசலில் வருகிறார்கள். அவ்வாறு வரும் நபர்கள் அங்கு குழிதோண்டி மணலை வெட்டி எடுத்து குழியின் மேல்புறம் குவிக்கிறார்கள். பின்னர் அந்த மணல் சலிக்கப்பட்டு குவியல் குவியலாக திட்டின் கரையோரம் கொட்டப்படுகிறது.

மணல் கடத்தலில் ஈடுபடும் மர்ம நபர்கள் மணல் திட்டு பகுதியில் குடிசை அமைத்து உள்ளனர். இந்த குடிசையில் அவ்வப்போது ஓய்வு எடுத்து அவர்கள் மணலை சலித்து வைக்கிறார்கள். பின்னர் பரிசல் மூலம் சலிக்கப்பட்ட மணல் கடத்தப்படுகிறது.

டிராக்டரில் கடத்தல்

இதற்காக பரிசல் அளவுக்கு தகுந்தாற்போல் தார்ப்பாய் போடப்பட்டு அதில் மணல் கொட்டப்படுகிறது. இதையடுத்து கோம்புக்காடு பகுதிக்கு மணல் கொண்டு செல்லப்பட்டு தார்ப்பாயில் இருந்து மணல் அப்படியே டிராக்டரில் கொட்டப்படுகிறது.

பின்னர் டிராக்டர்கள் மூலம் இரவு நேரங்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோம்புக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், பகலில் ஆற்று பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மணல் கடத்தல் நடைபெறுவதில்லை. நள்ளிரவில் மட்டும் தான் மணல் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திட்டமிட்டு மணல் கடத்தும் மர்ம நபர்களை பிடிக்க அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிகாரிகளின் கெடுபிடி இல்லாத காரணத்தினால் அம்மாபேட்டை அருகே மணல் கடத்தல் ஒரு தொழிலாகவே படுஜோராக நடைபெற்று வருகிறது. இனிமேலாவது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com