சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு காங்கிரஸ் அரசே காரணம் ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு

கடலோர மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று ஷோபா எம்.பி. குற்றம்சாட்டினார். #congress #TNnews
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு காங்கிரஸ் அரசே காரணம் ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

கடலோர மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று ஷோபா எம்.பி. குற்றம்சாட்டினார்.

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. நேற்றுமுன்தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

கேரள மாநிலம் கண்ணூரில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் உறுப்பினர் கொலை வழக்கில் இந்திய சமூக ஜனநாயக கட்சியை(எஸ்.டி.பி.ஐ.) சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தகைய அமைப்புடன் கர்நாடக காங்கிரஸ் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஆலோசனை நடத்துகிறதா?. சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் அதுபோன்ற அமைப்புகளை பா.ஜனதா எப்போதும் பயங்கரவாத பார்வையுடன் தான் பார்க்கிறது.

இந்திய சமூக ஜனநாயக கட்சி மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் பாபுபலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) போன்ற சில அமைப்புகள் நாட்டின் சில பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறது. சிமி அமைப்புக்கு உத்தரபிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 5 பேர் தேசிய புலனாய்வு அமைப்பு போலீசாரால்(என்.ஐ.ஏ.) கைது செய்யப்பட்டனர்.

அதே போல் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சரத்மடிவாளா கொலை வழக்கிலும் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையான ருத்ரேசுக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்று குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. கூறி இருக்கிறது. இது கொள்கைக்காக நடந்த கொலை என்பது தெளிவாக தெரிகிறது. கண்ணூர் சம்பவம் மூலம் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் அந்த அமைப்புகள் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்குகின்றன என்பது நிரூபணம் ஆகிறது. கர்நாடகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கு காங்கிரஸ் அரசு தான் காரணம். ஆனால் அதை ஏற்க மறுத்து பா.ஜனதாவை காங்கிரஸ் குறை சொல்கிறது. அதனால் இந்திய சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் மாநில மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். இதுபற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com