

திருச்சி,
தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ரவீந்திரன் கலந்து கொண்டார். இதில் பொதுச்செயலாளர் தியாகராஜன், பொருளாளர் சத்யரேகா, துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அனைத்து மழலையர் பள்ளிகளும் குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறையுடன் சட்டதிட்டங்களை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு 2015-ம் ஆண்டில் அறிவித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த முடியாதபடி உள்ளதால் பள்ளிகள் அங்கீகாரம் பெற முடியாமல் உள்ளன.
ஆகவே இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு புதிய எளிமையான விதிமுறைகளை வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு இளம் மழலையர் பள்ளியிலும் 5 முதல் 10 பெண்கள் நேரடி வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இளம் மழலையர் பள்ளிகள் உள்ளன.
அதன் மூலம் 25 ஆயிரம் பெண்கள் நேரடி வேலைவாய்ப்பும், 2 லட்சம் பெண்கள் மறைமுக வேலைவாய்ப்பும் பெறுகிறார்கள். ஆகவே இந்த பிரச்சினையில் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.