மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம்

சாணார்பட்டி அருகே பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; அக்காள், தம்பி உள்பட 3 பேர் படுகாயம்
Published on

கோபால்பட்டி:

சாணார்பட்டி அருகே உள்ள தெற்குகளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 73). விவசாயி. அவருடைய மகன் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், ஜெயஸ்ரீ (14), ஸ்ரீராம் (12) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர். இதில், ஜெயஸ்ரீயும், ஸ்ரீராமும் கொசவபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்களை செல்வராஜ் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, நேற்று தனது பேரக்குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு செல்வராஜ் கொசவபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சாணார்பட்டியை அடுத்த எமக்கலாபுரம் பிரிவு அருகில் அவர்கள் வந்தபோது, எதிரே திண்டுக்கல்லில் இருந்து கோபால்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வராஜ், ஜெயஸ்ரீ, ஸ்ரீராம் ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com