அக்கா-தங்கையை கத்தியால் குத்திய வழக்கு: தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது;

ஓட்டேரியில் அக்கா-தங்கையை கத்தியால் குத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
அக்கா-தங்கையை கத்தியால் குத்திய வழக்கு: தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது;
Published on

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி வள்ளுவ பண்டாரம் தெருவை சேர்ந்தவர்கள் கலைவாணி(வயது 19), சினேகா(17). இருவரும் அக்கா-தங்கை. வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் இட்டா என்ற அஜித்குமார்(21). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன.

இவர் வியாசர்பாடி போலீசாரால் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டு, கடந்த மாதம் வெளியே வந்தார். அஜித்குமாரின் மனைவி ரம்யா(19). கடந்த 30-ந்தேதி ரம்யா வீட்டில் இல்லை. இதனால் அஜித்குமார், ரம்யாவை தேடி அவரது தோழியான ஓட்டேரியில் உள்ள கலைவாணி வீட்டிற்கு சென்றார்.

அவருடன் நண்பர்களும், ரவுடிகளுமான பூச்சி என்ற ஸ்டீபன் (21) மற்றும் வெட்டுக்கிளி என்ற சூர்யா (22) ஆகியோரும் சென்றனர்.

ஆனால் அங்கும் ரம்யா இல்லாததை கண்டு அஜித்குமார் கலைவாணி மற்றும் சினேகாவிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியால் கலைவாணி, சினேகா ஆகியோரை குத்தினார். இதில் கலைவாணி லேசான காயம் அடைந்தார். சினேகா தலை, முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது ரவுடிகள் 3 பேரும் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஓட்டேரி தலைமை காவலர் மலைவேல் அங்கு சென்று சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுபற்றி கலைவாணி ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர் வழக்குபதிவு செய்து கடந்த 3 நாட்களாக ரவுடிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் 3 பேரும் கன்னிகாபுரம் பிரைட்டன் சாலையில் உள்ள பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டி தப்பி ஓடினார்கள். ஆனாலும் சப்-இன்ஸ்பெக்டர் காதர்மீரா மற்றும் தலைமை காவலர் மலைவேல் சினிமா காட்சியில் வருவதுபோல் அவர் களை துரத்திச்சென்றனர்.

தப்பி ஓடியபோது ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்த அஜித்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இறுதியில் போலீசார் அஜித்குமார் மற்றும் ஸ்டீபனை மடக்கிப்பிடித்தனர். சூர்யா தப்பி ஓடி விட்டார்.

தொடர்ந்து பிடிபட்ட 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய சூர்யாவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com