

சிவகங்கை,
கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அனைத்து வருவாய் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விளக்க கூட்டங்கள் மாவட்ட அளவில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
நேற்று சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மண்டல செயலாளர் சதீஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சிவகங்கை மாவட்ட தலைவர் முத்துவேல், செயலாளர் இளங்கோ, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சக்திவேல் உள்பட 2 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.