சிவகங்கையில் 2 குழந்தைகளுடன் பெண் பிணமாக கிடந்த சம்பவம்: வீட்டு உரிமையாளரின் தாய்-அண்ணன் கைது

சிவகங்கையில் 2 குழந்தைகளுடன் பெண் பிணமாக கிடந்த சம்பவத்தில் அவர்கள் வசித்த வீட்டு உரிமையாளரின் தாய், அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையில் 2 குழந்தைகளுடன் பெண் பிணமாக கிடந்த சம்பவம்: வீட்டு உரிமையாளரின் தாய்-அண்ணன் கைது
Published on

சிவகங்கை,

சிவகங்கை அருகே உள்ள அதப்படக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(வயது40). இவரது மனைவி காளஸ்வரி(35). இவர்களுடைய மகள் மங்கையர்திலகம்(12), மகன் அபிஷேக்(8).

பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இதையடுத்து காளஸ்வரி குழந்தைகளுடன் சிவகங்கை குறிஞ்சிநகரில் வசித்து வந்தார். இந்தநிலையில் பூட்டிய வீட்டுக்குள் காளஸ்வரி தூக்கிலும், அருகில் அவருடைய மகள், மகனும் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் காளஸ்வரி அந்த வீட்டில் ஒத்திக்கு குடியிருந்ததாகவும், இந்நிலையில் வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வீட்டின் உரிமையாளரின் தாய் சுந்தரி (65), அண்ணன் கார்த்தி என்ற கார்த்திகேயன் (40) ஆகியோர் தகராறு செய்து சாதியை சொல்லி திட்டியதாகவும், இதனால் மனம் உடைந்த காளஸ்வரி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் காளஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்தி என்ற கார்த்திகேயன், அவருடைய தாய் சுந்தரி ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காளஸ்வரியின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்துகொண்டு உள்ளார். அவர் வந்தபின்னரே பிரேத பரிசோதனை செய்து 3 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தைகள் உள்பட 3 பேரும் எவ்வாறு இறந்தனர்? என்பது பற்றிய முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com