மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் உள்பட 6 பேர் கைது

நிலக்கோட்டை அருகே வாலிபரை கொலை செய்ய முயன்ற மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் உள்பட 6 பேர் கைது
Published on

நிலக்கோட்டை:

ஆட்டோவில் வந்த கும்பல்

நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியை சேர்ந்தவர் அஜித் (வயது 27). இவரும், அதே ஊரை சேர்ந்த அருண்குமார் (25), மதுரையை சேர்ந்த குரு என்ற குமரகுரு (28) ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்தனர். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஜித்துக்கும், குருவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் குல்லிசெட்டிபட்டி கிராமத்துக்குள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் அஜித் வீட்டுக்குள் புகுந்து அவரை தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் வீட்டில் இருந்த அஜித்தின் தாய் மகேஸ்வரி, பாட்டி செல்லம்மாள், உறவினர் தங்கராஜ் ஆகியோரை தாக்கினர். மேலும் அஜித் வீட்டை அடித்து சேதப்படுத்தியதோடு, வீட்டின் முன்பு இருந்த கார், 2 மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூலிப்படை சிக்கியது

இதுகுறித்த புகாரின்பேரில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அஜித்துக்கும், அவரது நண்பர் குருவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த குரு, அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக மதுரை தத்தனேரியை சேர்ந்த பிரசாத் (24), இப்ராகிம் (25), கல்யாணசுந்தரம் (27), இளையராஜா (24) ஆகியோர் அடங்கிய கூலிப்படையுடன், குரு ஆட்டோவில் குல்லிசெட்டிபட்டிக்கு வந்தார். பின்னர் அஜித் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதற்கு அருண்குமார், அவரது உறவினரான சஞ்சய் (24) ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருண்குமார், சஞ்சய் மற்றும் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். குரு தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com