களக்காடு அருகே, வாலிபர் கொலையில் 6 பேர் கைது - 5 பேருக்கு வலைவீச்சு

களக்காடு அருகே வாலிபர் கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு அருகே, வாலிபர் கொலையில் 6 பேர் கைது - 5 பேருக்கு வலைவீச்சு
Published on

களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை அடுத்துள்ள பூலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற சுடலைக்கண்ணு (வயது 23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிங்கிகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், பூலம் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் திருமணத்தால் 2 கிராமத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன் எதிரொலியாகவே சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து களக்காடு போலீசார், 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிங்கிகுளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் சுரேஷ் என்ற பீலா சுரேஷ் (வயது 22), முருகன் மகன் சுரேஷ் (19), அங்கப்பன் மகன் மணிகண்டன் (22), முத்து சுரேஷ் (22), முத்து பாலன் (25), நாகேந்திரன் மகன் மாரிமுத்து (20) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com