அரிவாளால், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் போலீசார் கைது செய்தனர்

பேராவூரணி அருகே அரிவாளால் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
அரிவாளால், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் போலீசார் கைது செய்தனர்
Published on

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கூப்புளிக்காடு காமண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி(வயது 68). தொழிலாளி. இவருடைய மகன் ரவி(38). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. நிவேதா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகளும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவேதா, தனது குழந்தைகளுடன் பேராவூரணி அருகே முடச்சிக்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ரவியின் நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்ததை அக்கம், பக்கத்தினர் கவனித்து உள்ளனர்.

அரிவாள் வெட்டு

நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராமசாமியும், ரவியும் இருந்தனர். அப்போது தந்தை-மகனுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரவி, தந்தை என்றும் பாராமல் அரிவாளால் ராமசாமியின் கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். ரவி உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்தும், தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com