தூக்கத்தில் நடக்கும் வியாதியால் விபரீதம்: கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு

காஞ்சீபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் வியாதியால் கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
தூக்கத்தில் நடக்கும் வியாதியால் விபரீதம்: கிணற்றில் தவறி விழுந்து சிறுமி சாவு
Published on

தூசி,

காஞ்சீபுரம் மாவட்டம், முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் ரம்யா (வயது 15). ரம்யா கடந்த 3 வருடமாக திருவண்ணாமலை மாவட்டம் தூசி வாகை கிராமத்தில் உள்ள அவளுடைய பாட்டி முனியம்மாள் வீட்டில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து முடித்தாள். தூசி வாகை கிராமம் காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது.

11-ம் வகுப்புக்கு செல்ல இருந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு ரம்யா திடீரென மாயமானாள். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ரம்யாவின் மாமா ஞானபிரகாசம் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றில் ரம்யா பிணமாக கிடந்தாள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரம்யாவுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளது. இதனால் தூக்கத்தில் நடந்து வந்து கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது.

சிறுமி ரம்யாவின் தாய் தமிழ்செல்வியும் (46), தந்தை பார்த்தசாரதியும் ஏற்கனவே இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com