உள்ளாடையில் வைத்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தி வந்த திருச்சியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
உள்ளாடையில் வைத்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்
Published on

மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர். திருச்சியைச் சேர்ந்த அலிமா கனி (வயது 38) என்ற பெண் மீது சந்தேகம் கொண்ட பெண் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர்.

அவர் அணிந்திருந்த உள்ளாடையை சோதனை செய்தபோது அதில் நீல நிற பை இருந்தது. அந்த பையில் தங்க துகள்கள் கலந்த களிமண் போன்ற ஒரு பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது 1 கிலோ 417 கிராம் எடையாம். அதில் எப்படியும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் இருக்கும் என்று புலனாய்வு துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தெரிவித்தார். தீயில் எரிக்கும் பணிக்கு சுமார் 6 மணி நேரம் ஆகும். அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தீயில் வைத்து எரித்த பின்னர் தான் அதில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதை உறுதியாக கூறமுடியும் என்றும் அவர் கூறினார்.

களிமண் போன்ற பொருளில் தங்க துகள்களை கலந்து கடத்தி வந்தால் அவற்றை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கண்டுபிடிக்க இயலாது. இதனை அறிந்து தான் அவர் இவ்வாறு நூதன முறையில் தங்கம் கடத்தி வந்துள்ளார். ஏற்கனவே மருத்துவ பெல்ட்டில் இதுபோன்ற களிமண் பொருளில் தங்கம் கடத்தி வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது 2-வது முறையாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com