

புதுச்சேரி,
புதுவை காராமணிக்குப்பம் தோட்டாக்கால் மெயின் ரோடு மற்றும் பள்ளிவாசல் தெரு சந்திப்பு ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் சஜித், ரமேஷ், வெங்கடாசலபதி, போலீசார் ரத்தினம், செல்லத்துரை ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அந்த பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் வலுத்ததை தொடர்ந்து அவர்களை போலீசார் சோதனை போட்டனர். அப்போது கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். இதில், கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ரங்கநாதன் (வயது20), தங்கம் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 530 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். பரிசோதனை முடிவு வந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கைதானவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.