தங்கச்சிமடத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

தங்கச்சிமடத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
தங்கச்சிமடத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் நடராஜன் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- அகில இந்திய புண்ணியதலங்களில் ஒன்றான ராமேசுவரத்தில் ஏற்கனவே ரூ.68 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தங்கச்சிமடம் பகுதியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ரூ.80 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தங்கச்சிமடத்தில் உள்ள முக்கிய 4 வார்டுகளில் மட்டுமே முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது. இதற்கான நிதியை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் வழங்கி உள்ளனர்.

இத்திட்டத்தில் ஹேண்டு அன் ஹேண்டு இந்தியா என்ற தனியார் நிறுவனம், பசுமை ராமேசுவரம் அமைப்பு, தங்கச்சிமடம் ஊராட்சி ஆகியவை இணைந்து செயல்படும். குப்பைகளை சேகரித்து கொண்டு செல்வதற்கு 3 வாகனங்களும், 4 வார்டுகளில் உள்ள மக்கும், மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்காக கூடுதலாக 24 பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் தங்கச்சிமடத்தில் ஏற்கனவே உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு மறுசுழற்சி மூலம் கழிவுகளில் இருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்படும். இந்த திட்டத்திற்கு தங்கச்சிடம் பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை அனைவரும் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி. சேர்மன் மோகன் வெர்கிஸ், பொது மேலாளர் சுபிர்சந்திரா ககாடி, ஹேண்டு அன் ஹேண்டு இந்தியா அமைப்பு பொது மேலாளர் பரிசுத்தம், துணை தலைவர் அமுதசேகரன், பசுமை ராமேசுவரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரசுவதி, ஓ.என்.ஜி.சி. அதிகாரி பார்த்திபன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, தங்கச்சிமடம் ஊராட்சி செயலர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com