14 ஒன்றியங்களிலும் உழவர் கடன் அட்டைகள் வழங்க சிறப்பு முகாம்கள் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் உழவர் கடன் அட்டைகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.
14 ஒன்றியங்களிலும் உழவர் கடன் அட்டைகள் வழங்க சிறப்பு முகாம்கள் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
Published on

ஈரோடு,

கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விவசாயிகளின் நிதி தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டைகள் (கிஷான் கிரெடிட் கார்டுகள்) வழங்கப்பட்டு வருகின்றன.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. பயிர் சாகுபடியின் அளவை பொறுத்தும், கால்நடை வளர்ப்பை பொறுத்தும் அந்தந்த விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

உழவர் கடன் அட்டைகள் வைத்திருக்கும் விவசாயிகள் எந்த ஒரு ஈட்டுறுதியும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையும், நில ஈட்டுறுதியின் பேரில் ரூ.3 லட்சம் வரையிலும் கடனாக பெற்றுக்கொள்ளலாம். 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். உழவர் கடன் அட்டை 5 ஆண்டுகள் செல்லத்தக்கதாக வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உழவர் கடன் அட்டைகளை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஈரோடு மற்றும் தாளவாடி ஒன்றியங்களில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பவானிசாகர் ஒன்றியத்தில் முகாம் நடக்கிறது. ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி பவானி ஒன்றியத்திலும், 7-ந் தேதி அம்மாபேட்டை, மொடக்குறிச்சி ஒன்றியங்களிலும், 13-ந் தேதி கொடுமுடி, அந்தியூர் ஒன்றியங்களிலும் முகாம் நடக்கிறது.

14-ந் தேதி கோபி, பெருந்துறை ஒன்றியங்களிலும், 19-ந் தேதி நம்பியூர், சென்னிமலை ஒன்றியங்களிலும், 20-ந் தேதி டி.என்.பாளையம் ஒன்றியத்திலும், 21-ந் தேதி சத்தியமங்கலம் ஒன்றியத்திலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில ஆவணங்களுடன் சென்று உழவர் கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com