

விழுப்புரம்,
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், புதிய வகை வைரசான ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியை பின்பற்றி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
சிறப்பு பிரார்த்தனை
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், சி.எஸ்.ஐ. தூயஜேம்ஸ் ஆலயம், சேவியர் காலனி தூய பவுல் மிஷினரி ஆலயம், டி.இ.எல்.சி. ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிக்காக குடில் அமைக்கப்பட்டு கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடியபடி குழந்தை ஏசு சொரூபத்தை வைத்து ஆராதனை நடத்தினர். அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்தபடியும், அரசு விதித்த வழிகாட்டுதலின்படி முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
பிரார்த்தனை முடிந்த பின்னர் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்குகளை வெட்டி பரிமாறியபடி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதுபோல் சிறுவர், சிறுமிகளும் புதிய ஆடைகளை அணிந்தபடி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்க முடியாத கிறிஸ்தவர்கள் நேற்று நடந்த ஆராதனைகளில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் சிறப்பு ஆராதனையில் கலந்துகொண்டு வீடு திரும்பிய கிறிஸ்தவர்கள், தங்கள் அருகில் உள்ள குடும்பத்தினருடனும் இனிப்புகளை பகிர்ந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.