

வேதாரண்யம்,
நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகள் மூலமாகவும், பைபர் படகுகள் மூலமாகவும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். நாகை மாவட்ட கடல் பரப்பும், இலங்கை கடல் பரப்பும் அருகருகே இருப்பதால், நாகை மீனவர்கள் இலங்கையை சேர்ந்த கடற்படையாலும், கொள்ளையர்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
நாகை மாவட்டம் வேதாரண்யம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்லும் மீனவர்களிடம் இலங்கை கடற்படை அராஜக போக்கை கையாள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மாவட்ட மீனவர்களின் வலைகள், பிடித்து வைத்திருக்கும் மீன்கள், மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து செல்வதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள். இந்த நிலையில் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தை சேர்ந்த சத்தியசீலன் (வயது44) என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் மாணிக்கம் (55), மணிகண்டன் (30) ஆகியோருடன் மீன்பிடிக்க சென்றார்.
சத்தியசீலன் உள்பட 3 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் சிலர், மீனவர்கள் கடலில் விரித்து வைத்திருந்த வலைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். கொள்ளை போன வலைகளின் எடை 200 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலைகளை கடற்கொள்ளையர்கள் திடீரென வந்து கொள்ளையடித்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீன்பிடிக்க வேறு வழியின்றி ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வந்தனர். இதுதொடர்பாக மீனவர் கிராம பஞ்சாயத்தார்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் திடீரென வந்து மீன்பிடி வலைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நாகை, வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறார்கள். இதை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
கடற்கொள்ளையர்களிடம் எங்களுடைய மீன்பிடி உபகரணங்களை தொடர்ந்து இழந்து வருகிறோம். கொள்ளை போன மீன்பிடி உபகரணங்களை மீட்டுத்தர வேண்டும். நாகை கடல் பகுதியில் இந்திய கடற்படை அடிக்கடி கண்காணிப்பு பணி மேற்கொண்டு, மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கடற்கொள்ளையர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.