மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96.45 சதவீதம் பேர் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96.45 சதவீதம் பேர் தேர்ச்சி
Published on

திருச்சி,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. திருச்சியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வெளியிட்டார். மாவட்டத்தில் 445 பள்ளிகளில் 17 ஆயிரத்து 673 மாணவர்களும், 17 ஆயிரத்து 630 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 303 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதியிருந்தனர். இதில் 16 ஆயிரத்து 735 மாணவர்களும், 17 ஆயிரத்து 316 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடந்த ஆண்டில் 96.29 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 96.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.16 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும் பிற மாவட்டங்களோடு ஒப்பிடும்போது சில சறுக்கல்கள் உள்ளது. அந்த குறைகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்படும்.

மாநில அளவில் 13-வது இடம்

தமிழ் பாடத்தில் 97.33 சதவீதமும், ஆங்கில பாடத்தில் 98.08 சதவீதமும், கணித பாடத்தில் 97.34 சதவீதமும், அறிவியல் பாடத்தில் 98.99 சதவீதமும், சமூக அறிவியல் பாடத்தில் 97.84 சதவீதமும் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 13-வது இடம் பிடித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணி அளவில் வெளியானதும் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது. மேலும் பள்ளிகளில் தேர்வு முடிவுகள் மதிப்பெண் விவரத்துடன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் ஸ்மார்ட் செல்போன்களில் இணையதளம் வாயிலாகவும் மதிப்பெண் விவரங்களை மாணவ-மாணவிகள் அறிந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com