

புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் உள்ள அன்னம்மாள் புரத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கி தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் புனித அன்னம்மாள் ஆலய தேர்பவனி கடந்த 18-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அருட்தந்தை ஸ்டீபன் தலைமையில், கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.
பின்னர் கோவிலில் இருந்து திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. இதில் அன்னம்மாள்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணியளவில் நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது.
தேர்பவனி
கடந்த 20-ந் தேதி மாலை 5.30 மணியளவில் நற்கருணை பவனி நடைபெற்றது. தொடர்ந்து 21-ந் தேதி காலை 10 மணியளவில் தியானம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் புனித அன்னம்மாளை எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று காலை 8.30 மணியளவில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயம் முன்பு திரளான கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கொடியிறக்கத்துடன் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நிறைவு பெற்றது.