நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்தி கொன்ற டிரைவர் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்தி கொன்ற டிரைவர் கைது
Published on

மும்பை,

மும்பை குலா, கிறிஸ்டியன் காவ் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ்(வயது34). டிரைவர். இவரது மனைவி சீத்தல்(29). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 5 வயது மகளும் உள்ளனர். தினேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த சீத்தல் சமீபத்தில் மாயமானார். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் சீத்தலை கண்டுபிடித்தனர். இதையடுத்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் வந்து தினேசுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் வழக்கம்போல கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி சீத்தலை கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில், படுகாயம் அடைந்த சீத்தலை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் சீத்தல் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com