ஸ்டாலின், விரைவில் முதல்-அமைச்சராகி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவார் - பட்டுக்கோட்டையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின், விரைவில் முதல்-அமைச்சராகி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவார் என்று பட்டுக்கோட்டையில், உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலின், விரைவில் முதல்-அமைச்சராகி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவார் - பட்டுக்கோட்டையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

பட்டுக்கோட்டை,

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின் பேரில், பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் பள்ளி திடலில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை தொகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், பசுமை சைதை திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் தென்னங்கன்றுகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

கஜா புயல் 5 மாவட்டங் களைப் புரட்டி போட்டு விட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 4 முறை வந்து பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் இந்த உதவியை இங்கு வந்து செய்கிறார் என்றால் அது தி.மு.க.வினரால் மட்டுமே முடியும்.

நமது தலைவர் ஸ்டாலின், முதல்-அமைச்சர் செய்ய வேண்டிய வேலையை செய்கிறார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும், மேகதாது அணை பிரச்சினையாக இருந்தாலும் நமது தலைவர்தான் செய்கிறார். நமது தலைவர், விரைவில் முதல்-அமைச்சராகி மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றுவார். இவ்வாறுஅவர் பேசினார். கஜா புயலால் தென்னை மரங்கள் சேதம் அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட திட்டக்குடியை சேர்ந்த கலைவாணன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com