அனகாபுத்தூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் படுகாயம்

சாலையோரம் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
அனகாபுத்தூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதல்; டிரைவர் படுகாயம்
Published on

தாம்பரம்,

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு நேற்று காலை, 7 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அனகாபுத்தூர் அருகே வந்தபோது, அங்கு சாலையோரம் பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் அரசு பஸ் டிரைவரான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த தமிழ்மணிக்கு(வயது 51) 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், டிரைவர் தமிழ்மணியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தின்போது பஸ்சில் 7 பயணிகள் மட்டுமே இருந்ததால் அவர்கள் அனைவரும் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவரான திருவேற்காடு ஈஸ்வரன் நகர், 3-வது தெருவை சேர்ந்த சிவகுமார் (41) என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com