‘சீட் பெல்ட்’ அணியாத அரசு பஸ் டிரைவருக்கு அபராதம்; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

மானாமதுரையில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் அரசு பஸ்சை ஓட்டியதாக டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சீட் பெல்ட்’ அணியாத அரசு பஸ் டிரைவருக்கு அபராதம்; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
Published on

மானாமதுரை,

மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள மானாமதுரை நகரம் வழியாக தினசரி 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, ஈரோடு, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ராமேசுவரம், கமுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு மானாமதுரை வழியாக அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மானாமதுரை நகருக்கு சமீபத்தில் சென்னையில் இருந்து பதவி உயர்வில் சிவசங்கரநாராயணன் என்பவர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பதவியேற்றார். மானாமதுரையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.100-ல் இருந்து ரூ.1,000 வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். தினசரி அவரது தலைமையில் போக்குவரத்து போலீசார் பைபாஸ் ரோடு, அண்ணாசிலை, தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவசங்கர நாராயணன் தலைமையிலான போலீசார், மானாமதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தல்லாகுளம் முனீஸ்வரர் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். பின்னர் டிரைவரிடம் சீட் பெல்ட் ஏன் அணியவில்லை என கூறி ரூ.100 அபராதம் விதித்தனர். இதேபோல் தனியார் பஸ்களுக்கும் அபராதம் விதித்தனர்.

அரசு பஸ்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசு பஸ்களில் சீட் பெல்ட்டே இல்லை. இந்நிலையில் அரசு பஸ்சை மறித்து சீட் பெல்ட் அணியவில்லை என கூறி டிரைவருக்கு அபராதம் விதித்த சம்பவம் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com