மாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

மாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளை கலெக்டர் சாந்தா பாராட்டினார்.
மாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு
Published on

பெரம்பலூர்,

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோர் தடகள போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 4 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளனர். மேலும் சென்னையில் நடைபெற்ற ரிலையன்ஸ் பவுன்டேசன் மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான தடகளபோட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்துகொண்டு 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் மற்றும் சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ரூ.25 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் பெற்று சாதனை படைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் சாந்தவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வருகிற 15-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடகளபோட்டிகளில் தமிழக அணி சார்பாக கலந்துகொள்ள உள்ள மாணவிகள் பிரியதர்ஷினி, சுபாஷினி, சங்கீதா, கிருத்திகா, பவானி, நாகபிரியா ஆகியோரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சியாளர் கோகிலா ஆகியோரை மாவட்ட கலெக்டர் பாராட்டினார். மேலும் தென்னிந்திய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் மாணவிகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா உடனிருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com