பெரம்பலூரில் மாநில அளவிலான ரோல் பந்து போட்டி தொடக்கம்

தமிழ்நாடு ரோல் பந்து (ரோல் பால்) சங்கம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பந்து போட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
பெரம்பலூரில் மாநில அளவிலான ரோல் பந்து போட்டி தொடக்கம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் போட்டியை தொடங்கி வைத்தார். மதுரை, திருச்சி, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 18 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் போட்டிகளில் கலந்து கொண்டன. விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் 14 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.

ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு உபகரணத்தை காலில் அணிந்தவாறே மாணவ, மாணவிகள் பந்தை தட்டி தட்டி சென்று கோல் கம்பிகளுக்கு இடைப்பட்ட பகுதிக்குள் எறிந்து விளையாடிய இந்த போட்டியை பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். லீக் போட்டிகள் முடிந்து விட்டதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

வெற்றி பெறும் அணியின் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் வருகிற செப்டம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் அன்புதுரை செய்திருந்தார். முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்ரமணியராஜா மற்றும் மாநில தலைவர் ஆவன்செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com