திருமணஞ்சேரி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மாலைகள் வாங்க கட்டாயப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருமணஞ்சேரி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மாலைகள் வாங்க கட்டாயப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருமணஞ்சேரி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மாலைகள் வாங்க கட்டாயப்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

குத்தாலம்,

குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் கோகிலாம்பாளுடன் கூடிய உத்வாகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருமணத்தடை உள்ளவர்கள் வந்து வழிபட்டால், தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலுக்கு கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலின் முன்பு தேங்காய், மலர் மாலை உள்ளிட்டவை அடங்கிய அர்ச்சனை பொருட்கள் தனியாரும், கோவிலுக்குள் அரசு சார்பிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவிலின் வாசல் முன்பு பக்தர்களிடம், அர்ச்சனை பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. பேரம் பேசும் வகையில் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து பல்வேறு புகார்கள் அரசின் கவனத்திற்கு சென்றதால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி அர்ச்சனை பொருட்களை கோவில் நிர்வாகம் மட்டுமே விற்பனை செய்வது என்றும், கோவிலுக்கு வெளியே அர்ச்சனை பொருட்களை தனியார் விற்பனை செய்யக்கூடாது என்றும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோவில் நிர்வாகம் சார்பில் 2 சிறிய மாலைகள், 2 தேங்காய்கள், 3 எலுமிச்சை பழங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களுடன் அர்ச்சனை கட்டணத்தையும் சேர்த்து ரூ.150 வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு பலகையும் கோவில் வாசல் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவிலின் வாசலில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை, உள்ளூர் கடைக்காரர்களில் ஒரு சிலர் தடுத்து நிறுத்தி ரூ.100-க்கு 2 சிறிய மாலைகளை விற்பனை செய்கின்றனர். அதனை வாங்காத பக்தர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.

எனவே, பக்தர்களின் நலன் கருதி தேவையின்றி மாலைகளை வாங்க கட்டாயப்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com