

ஸ்ரீவில்லிபுத்தூர்,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த பென்னிங்டன் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை நகரைவிட்டு ஒதுக்குப்புறமாக உள்ள மங்காபுரம் பள்ளி மைதானத்தில் மாற்றி தற்போது அங்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இங்கு மாறிய பிறகு தினமும் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
எனவே ஒரு நாளைக்கு பலமுறை காய்கறிகள் வாங்க வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று காலை மங்காபுரம் பள்ளி மைதானத்தில் காய்கறி வாங்க வருபவர்களின் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
இந்த பணியை ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒருமுறை காய்கறி வாங்குபவர்கள் ஒருவாரத்திற்கு தேவையான அளவிற்கு காய்கறிகளை வாங்கி மொத்தமாக வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு தேவையான காய்களை வாங்கி வைத்துவிட்டு 3-வது நாள் மார்க்கெட்டுக்கு வந்தால் போதும். அதுவே பாதி கூட்டம் குறைந்துவிடும் அடிக்கடி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனையும் மீறி வந்தால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.