அலங்காநல்லூரில் பரபரப்பு: புதிய தமிழகம் கட்சி-வ.உ.சி. பேரவையினர் மோதல் போலீஸ் தடியடி-14 பேர் கைது

அலங்காநல்லூரில் புதிய தமிழகம் மற்றும் வ.உ.சி. பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
அலங்காநல்லூரில் பரபரப்பு: புதிய தமிழகம் கட்சி-வ.உ.சி. பேரவையினர் மோதல் போலீஸ் தடியடி-14 பேர் கைது
Published on

அலங்காநல்லூர்,

வேளாளர் என்ற பெயரை மற்றொரு சமூகத்தினர் பயன்படுத்த தமிழக அரசு பரிந்துரை செய்ததை கண்டித்து மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில் தென் மாவட்ட வ.உ.சி. பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராம்குமார், மகளிர் அணி சகிலா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் வ.உ.சி.பேரவையின் ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பியபடி திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனால் இரு பிரிவினரும் மோதி கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜெயலட்சுமி(வயது 52) என்ற பெண் தலையில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மோதல் சம்பவத்தை தடுக்க அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

14 பேர் கைது

தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்பட அக்கட்சியினர் 14 பேர் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த மோதல் சம்பவத்தால் கேட்டுக்கடை பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com