

தொழிலதிபர்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், ஆர்.ஜி.என் நகரில் வசித்து வருபவர் பிரதீஷ் (வயது 36). தொழிலதிபர். இவருக்கு சுவேதா என்ற மனைவியும், கிருஷிக் நரசிம்மா (8), அத்விக்நரசிம்மா (4) என்ற மகன்கள் உள்ளனர்.
இவர் தனது மகன்களின் படிப்பிற்காக சென்னை அண்ணா நகரில் வீடு வாங்கி வசித்து வருகிறார். இருப்பினும் பெரியபாளையத்தில் விவசாய நிலம் உள்ளதால், அடிக்கடி இங்கு வந்து தங்கி தொழில் மற்றும் விவசாயத்தை கவனித்து வருகிறார்.
கொள்ளை
இந்நிலையில், பிரதீஷ் தனது நண்பருடன் 3 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐதராபாத் சென்றிருந்தார். எனவே அவரது கார் டிரைவர் பிரதீஷ் (23) என்பவர் வீட்டை கவனித்து வந்தார். நேற்று காலை டிரைவர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த 3 நாய்களும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், வீட்டின் பூட்டை உடைத்துக்கொண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொழிலதிபருக்கு தகவல் அளித்தார். பின்னர், இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில், போலீசார் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.