

பலத்த சீற்றத்துடன் காணப்பட்ட கடல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களாக கடல் பலத்த சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று காலை கடல் அலைகள் 8 அடி உயரத்துக்கு எழும்பின. கடல் நீர் 15 அடி தூரத்திற்கு கரைப்பகுதி வரை முன்னோக்கி வந்ததால் கரைப்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டதை காண முடிந்தது. கடல் சீற்றத்தால் கரைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள வலைகள், படகுகள் சேதமடைவதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.கடல் சீற்றத்தின் மத்தியில் சுற்றுலா வந்த சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலுக்கு பின்புறம் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.
தூண்டில் வளைவு
கடல் சீற்றத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தமிழக அரசு உடனடியாக மாமல்லபுரம் கடற்கரை கோவில் முதல் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் வரை தூண்டில் வளைவு அமைத்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொக்கிலமேடு, தேவனேரி, நெம்மேலிகுப்பம், புதுஎடையூர் குப்பம், பட்டிபுலம் குப்பம், வெண்புருஷம் குப்பம், சூளேரிக்காட்டு குப்பம் போன்ற மீனவ பகுதிகளிலும் கடல் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது.