பூதப்பாண்டியில் பலத்த காற்று: மரம் வேரோடு சாய்ந்ததில் வாலிபர் பலி பெற்றோர் கண் எதிரே பரிதாபம்

பூதப்பாண்டியில் பலத்த காற்று வீசியதில் மரம் வேரோடு சாய்ந்தது. இதில் பெற்றோர் கண் எதிரே வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பூதப்பாண்டியில் பலத்த காற்று: மரம் வேரோடு சாய்ந்ததில் வாலிபர் பலி பெற்றோர் கண் எதிரே பரிதாபம்
Published on

பூதப்பாண்டி,

பூதப்பாண்டியை அடுத்த சீதப்பால் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி கவுரி இவர்களுடைய மகன் அஜித்குமார் (வயது 19), மகள் அபிராமி. அஜித்குமார் ஐ.டி.ஐ. படித்து விட்டு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். அஜித்குமாரின் தாத்தா சுடலை முத்து சீதப்பாலை அடுத்துள்ள ஏட்டுகோணம் பகுதியில் தென்னந்தோப்பை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் கனகராஜ் வீட்டுக்கு நேற்று கவுரியின் உறவினர்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து வீட்டில் பிரியாணி சமைத்தனர். அதை எடுத்துக்கொண்டு, தென்னந்தோப்பில் சாப்பிட சென்றனர். அங்கு அவர்கள் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டனர். பூதப்பாண்டி பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த இடத்தின் அருகே நின்ற தென்னை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அஜித்குமார் மீது விழுந்தது.

பலி

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவம், அஜித்குமாரின் பெற்றோர், உறவினர்கள் கண் எதிரே நடந்தது. இதனால் அவர்கள் அஜித்குமார் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com