ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததால் மீனவர் சாவு

கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவரின் படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்ததில் மீனவர் இறந்தார். படகு கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்ட மீனவரின் தலை பாறையில் மோதியதில் மண்டை உடைந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததால் மீனவர் சாவு
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 52). இவர் நேற்று பகல் 1 மணியளவில் பைபர் படகில் தனியாக கடலில் மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்து விட்டு மாலையில் அவர் கரை திரும்பினார். திருச்சிணாங்குப்பம் அருகே படகு வந்து கொண்டிருந்தபோது ராட்சத அலையில் அவரது படகு சிக்கியது. ராட்சத அலை மீனவரின் படகை புரட்டி போட்டது.

அப்போது படகில் இருந்த மீனவர் குப்பன் அதில் இருந்து தூக்கி வீசப்பட்டார். கடற்கரையோரம் தூண்டில் வளைவுக்காக போடப்பட்டுள்ள பாறாங்கல்லில் அவரது தலை மோதி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான மீனவர் குப்பனுக்கு சுமதி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com