

ஈரோடு
பள்ளிக்கூடத்தில் தகாத வார்த்தை பேசியதை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவரை உடற்கல்வி ஆசிரியர் கடித்தார்.
தகாத வார்த்தை
ஈரோடு காசிபாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மாணவர்களிடம் உடற்கல்வி ஆசிரியர் தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது.
இதுபற்றி அந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சிலர் நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு சென்று தட்டிக்கேட்டனர். அப்போது அந்த ஆசிரியருக்கும், பெற்றோர் தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பிறகு கைகலப்பாக மாறியது.
மாணவரை கடித்தார்
இதில் ஆத்திரம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர் ஒரு மாணவரின் அண்ணனான தமிழரசு (19) என்பவரை கடித்தார். தமிழரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தொடர்ந்து காயம் அடைந்த தமிழரசு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கல்வி மாவட்ட அதிகாரி மாதேஸ் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு அதிகாரிகள், மாணவர்களின் பெற்றார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.