தரமான உணவு வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தரமான உணவு வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமான உணவு வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
Published on

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே மண்டையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 130 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப் பதற்காக சத்துணவு அமைப்பாளர் மற்றும் 2 உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இப்பள்ளியில் சமைக்கப்படும் மதிய உணவு தரமாக இல்லை. மேலும் சத்துணவில் முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர். பின்னர் பள்ளியில் தரமான உணவு வழங்கவேண்டும், சத்துணவில் உள்ள முறைகேடுகளை தடுக்க வேண்டும் எனக்கூறி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை சத்துணவு மேலாளர் அபிராமசுந்தரி, வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். மேலும் பெற்றோர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com