தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த கோரி, விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா

தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த கோரி, விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா
Published on

விருத்தாசலம்,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று விருத்தாசலம் பாலக்கரையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கையில் கரும்புகளை ஏந்தியவாறு ஊர்வலமாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் சப்-கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பெண்ணாடம் மற்றும் சித்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளின் பெயரில் தேசிய வங்கிகளில் ரூ.300 கோடி கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்த மோசடிக்கு காரணமான சர்க்கரை ஆலை உரிமையாளர் ராம்தியாகராஜன், பொது மேலாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்க்கரை ஆலை உரிமையாளரின் சொத்துக்களை பறிமுதல் செய்து. விவசாயிகளை வங்கி கடன் பிரச்சினையில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும், மேலும் மோசடியில் ஈடுபட்ட தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த சப்-கலெக்டர் பிரசாந்த் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார். அதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com