முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கருத்தடை ஆபரேஷன் செய்த பெண் திடீர் சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கருத்தடை ஆபரேஷன் செய்த பெண் திடீரென இறந்தார். இதையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கருத்தடை ஆபரேஷன் செய்த பெண் திடீர் சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
Published on

விக்கிரவாண்டி,

செஞ்சி அருகே உள்ள மேல்களவாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 36), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜகுமாரி (27). இவர்களுக்கு வள்ளி (7), தமிழ்செல்வி (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜகுமாரி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 18-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ராஜகுமாரியை அவரது உறவினர்கள், மேல்சித்தாமூரில் உள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அன்று இரவு அவருக்கு சுக பிரசவத்தில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து குழந்தையையும், ராஜகுமாரியையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை உடல்நிலை தேறியதால் கடந்த 23-ந் தேதி ராஜகுமாரிக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ராஜகுமாரி திடீரென இறந்துவிட்டார்.

இதையறிந்ததும் ராஜகுமாரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். ராஜகுமாரிக்கு டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால்தான் இறந்துவிட்டதாக அவர்கன் குற்றம்சாட்டினர்.

மேலும் ராஜகுமாரியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராஜகுமாரியின் உறவினர்கள் கூறுகையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அரசு சார்பில் நிவாரண தொகை வழங்க வேண்டும், ராஜகுமாரியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று முறையிட்டனர். இதை கேட்டறிந்த போலீசார், இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com