தனியார் நிலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

தனியார் நிலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு
தனியார் நிலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு
Published on

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நம்பம்பட்டி அணைக்குளம் பகுதி அருகே முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் திடீரென்று சுமார் 8 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. மேல்பகுதி குறுகலாகவும், கீழ் பகுதி விரிவடைந்தும் இருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் ஏதாவது புதையல் இருக்கலாம் என்று கூறி நூற்றுக்கணக்கானோர் அந்த இடத்தில் திரண்டனர். இது குறித்து வருவாய்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மணப்பாறை தாசில்தார் ராஜேந்திரன் தலைமையிலான வருவாய்துறையினரும், மணப்பாறை இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். சிலர் அந்த பள்ளத்தில் இறங்கியும் பார்த்தனர். பின்னர் பொய்கைப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்தையாகவுண்டர் மற்றும் அந்த பகுதி மக்கள் அந்த பள்ளத்தில் என்ன இருக்கிறது என பார்த்து தெரிவிக்கும் படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளம் முழுவதுமாக தோண்டப்பட்டது. அப்போது பள்ளத்தில் ஏதும் இல்லை என தெரிய வந்தது. சுமார் 8 அடி ஆழம் கிணறு போன்று இருந்த இந்த பள்ளம் நம் முன்னோர் காலத்தில் தானியங்களை வைக்க பயன்படுத்தும் கிடங்கு போல் இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவம் நேற்று காலை முதல் மதியம் வரை அந்த பகுதியில் பரபரப்பாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com