நாகர்கோவிலில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் போராட்டம்; பரபரப்பு

நாகர்கோவில் ஸ்காட் நகரில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவிலில் அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் போராட்டம்; பரபரப்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே ஸ்காட்நகர் உள்ளது. இங்குள்ள பிரதான சாலை அடிக்கடி பழுதாகி வந்தது. இதையடுத்து சாலையை சீரமைத்து அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி தொடங்கியது. சுமார் 10 நாட்களாக நடைபெற்று வந்த பணியானது நேற்று முடிவுறும் தருவாயில் இருந்தது.

ஆனால் நேற்று காலை ஸ்காட்நகருக்கு வந்த மாநகராட்சி அதிகாரி ஒருவர், அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணியை திடீரென நிறுத்தினார். இங்கு கான்கிரீட் சாலை அமைக்க மட்டுமே அனுமதி உள்ளது என்றும், தவறுதலாக அலங்கார தரைகற்கள் பதிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் கூறினார். மேலும் ஏற்கனவே சுமார் 200 மீட்டர் தூரம் வரை பதிக்கப்பட்டு இருந்த அலங்கார தரைகற்களை உடனே எடுக்கும்படியும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அலங்கார தரைகற்களை அகற்றும் பணி தொடங்கியது. சாலை ஓரம் உள்ள வீடுகளுக்கு முன் மிகவும் அழகாக காட்சி அளித்த அலங்கார தரைகற்களை பணியாளர்கள் அகற்றியதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதைத் தொடர்ந்து அலங்கார தரைகற்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் மகேசும் கலந்துகொண்டார். போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு ஏற்கனவே வந்திருந்த மாநகராட்சி அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அலங்கார தரைகற்களுக்கு பதிலாக தரமான கான்கிரீட் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com