சோழவந்தான் பகுதியில் கோடைமழையால் நெல் பயிர்கள் சேதம்

சோழவந்தான் பகுதியில் பெய்த கோடை மழையால் நெல் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான் பகுதியில் கோடைமழையால் நெல் பயிர்கள் சேதம்
Published on

சோழவந்தான்,

மதுரை அருகே உள்ள சோழவந்தான் தென்கரை, முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக விவசாயம் கைகொடுக்காததால் விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்துவருகின்றனர். இதனால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவருகின்றனர்.

சோழவந்தான் பகுதி விவசாய தொழிலை மட்டும் நம்பியுள்ள இடமாகும். காலசூழ்நிலையால் விவசாயம் தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் ஒரு சில விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மூன்று போக விளைச்சல் நடைபெற்று வந்தது. தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் ஒருசிலர் மட்டும் ஒருபோக விவசாயம் செய்துவருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் நெல் விளைச்சலுக்கான பால் பிடித்துக்கொண்டிருக்கும் தருவாயில் ஒருசிலர் தண்ணீர் பாய்ச்சினால் முழுமையாக நெற்கதிரை விளைச்சலுக்கு கொண்டு வரலாம் என்று விலைக்கு தண்ணீர் வாங்கி நெல்பயிரை விவசாயிகள் காப்பாற்றினர்.

அறுவடைக்கு தயாராக நெல்பயிர்கள் இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த கோடைமழையால் முள்ளிப்பள்ளம், தென்கரை, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பலத்த காற்றால் வாழைத் தோட்டங்களில் இடைஇடையே வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்து உள்ளன. தொடர்ந்து இப்பகுதியில் மழை, சூறாவளி காற்றால் விவசாயிகள் பெருத்த நஷ்ட மடைந்து வருகின்றனர். இதற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த முறையாவது விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்று ஏக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் கைகொடுக்காததால் பாதிப்பையும், நஷ்டத்தையும் விவசாயிகள் சந்தித்து வருகிறோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பாதிப்பை பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com