பட்டா மாற்றம் செய்ய வாலிபரிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது

கண்டாச்சிபுரத்தில் பட்டாமாற்றம் செய்ய வாலிபரிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய நிலஅளவையரை லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பட்டா மாற்றம் செய்ய வாலிபரிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய நிலஅளவையர் கைது
Published on

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் முகையூர் குறுவட்ட நில அளவை அலுவலராக பழைய கருவாச்சி கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 33) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முகையூர் குறுவட்டத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (30) என்பவர் தனது உறவினர் வீட்டு நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்து தர கோரி நில அளவையர் ராகவேந்திரனை அணுகினார். அதற்கு அவர், பட்டாமாற்றம் செய்ய தர வேண்டுமானால் தனக்கு லஞ்சமாக ரூ.7,500 தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். லஞ்சம் தரவில்லையெனில் நிலத்தை அளந்து பட்டா மாற்றம் செய்து தரமாட்டேன் என்று மூர்த்தியிடம் ராகவேந்திரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஆவணங்கள் பறிமுதல்

லஞ்சம் கொடுக்க விரும்பாத மூர்த்தி, இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ராகவேந்திரனை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பொடி தடவிய ரூ.7,500-யை மூர்த்தியிடம் கொடுத்து, அதனை ராகவேந்திரனிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு யுவராஜ், இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன் ஆகியோர் கூறினர். அதனை வாங்கி கொண்டு கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த ராகவேந்திரனிடம் மூர்த்தி கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ராகவேந்திரனை மடக்கிபிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சில ஆவணங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com