நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2-வது மனைவி குத்திக்கொலை போலீசில் கணவர் சரண்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2-வது மனைவியை சரமாரியாக குத்திக்கொலை செய்த கணவர், போலீசில் சரணடைந்தார்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2-வது மனைவி குத்திக்கொலை போலீசில் கணவர் சரண்
Published on

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 17-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (வயது 31). இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஒரே வருடத்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

தனியாக வசித்து வந்த சார்லஸ் ராஜ்குமார், கடந்த ஆண்டு வியாசர்பாடியில் வசித்து வரும் ரமணி (35) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். ரமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த சார்லி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சார்லஸ் ராஜ்குமார், இதுபற்றி தனது 2-வது மனைவி ரமணியிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ரமணி, கடந்த வாரம் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று சார்லஸ் ராஜ்குமார், மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

பின்னர் வீட்டில் இருந்த சார்லஸ் ராஜ்குமார், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ரமணியின் கழுத்தில் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர், கத்தியுடன் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com