பெங்களூரு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் அடித்துக் கொலை

பெங்களூரு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். விபத்தில் இறந்ததாக கூறி நாடகமாடிய கணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் அடித்துக் கொலை
Published on

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புரா அருகே வசித்து வருபவர் மஞ்சுநாத், கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயம்மா (வயது 35). இந்த நிலையில், ஜெயம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் மஞ்சுநாத் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. பின்னர் சம்பவத்தன்று நள்ளிரவு தலையில் பலத்த காயத்துடன் ஜெயம்மாவை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் மஞ்சுநாத் அனுமதித்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெயம்மா கீழே விழுந்து விட்டதால், தலையில் காயம் அடைந்திருப்பதாக டாக்டர்களிடம் அவர் கூறினார். இதையடுத்து, ஜெயம்மாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இதற்கிடையில், ஜெயம்மா சாவில் சந்தேகம் இருப்பதாக தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயம்மாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதே நேரத்தில் மஞ்சுநாத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. முதலில் தனது மனைவி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாக கூறிய மஞ்சுநாத், பின்னர் ஜெயம்மாவை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதாவது ஜெயம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மஞ்சுநாத் சண்டை போட்டுள்ளார்.

அப்போது ஜெயம்மாவை அவர் அடித்து, உதைத்துள்ளார். இதில், ஜெயம்மாவின் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com