சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 4-ம் திருநாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் வீதி உலா
Published on

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

5-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது.

இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான்- தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளிய பின்னர் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.

7-ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்திய கோலத்திலும், 8-ம் திருநாளான 27-ந்தேதி அதிகாலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்திய கோலத்திலும், மதியம் சுவாமி பச்சை சாத்திய கோலத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

10-ம் திருநாளான 1-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 11-ம் திருநாளான 2-ந்தேதி இரவில் தெப்ப திருவிழா நடக்கிறது. 12-ம் திருநாளான 3-ந்தேதி மஞ்சள் நீராட்டு திருவிழாவுடன் மாசி திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com