

பூந்தமல்லி,
பூந்தமல்லி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் வைதியநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;-
தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் இந்திய நாட்டிற்கு முக்கியமான தேர்தல் ஆகும். எங்களது வெற்றி கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் மட்டும் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.
அப்படி பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே தமிழகம் உள்பட மற்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைய முடியும். மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மதச்சார்பின்மையை பற்றி பேசுகிறார்கள். அதற்கு அவர்கள் தகுதி அற்றவர்கள்.
தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. ஒத்த கருத்துடைய மத்திய, மாநில ஆட்சிகள் இருந்தால் மட்டுமே நாட்டை வளப்படுத்த முடியும், மத்தியில் பா.ஜனதா ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.