திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
Published on

திருவண்ணாமலை

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், அருணை மருத்துவக்கல்லூரி இயக்குனருமான எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் டி.குணசிங் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் விளக்கவுரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்து பேசினார். இதில் தமிழில் 21 தலைப்புகளிலும், ஆங்கிலத்தில் 21 தலைப்புகளிலும் மாணவர்கள் உரை நிகழ்த்தினர். தமிழில் 200 மாணவர்களும், ஆங்கிலத்தில் 150 மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

போட்டியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல் 3 பேருக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வார்கள்.

அனைத்து பரிசு மற்றும் சான்றிதழ்கள் சென்னையில் நடைபெற உள்ள விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. முடிவில் மருத்துவமனை துறைத்தலைவர் டாக்டர் ஜ.ஜெயராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com