போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி

தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்குவது ஆபத்தானது. எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
Published on

வேலூர்,

போக்குவரத்து ஊழியர்கள் இன்று (அதாவது நேற்று) 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக பயிற்சியற்றவர்களை கொண்டு அரசு, பஸ்களை இயக்குகிறது. மக்களின் உயிரோடு அரசு விளையாடக்கூடாது.

தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்குவது மிகவும் ஆபத்தானது. அரசு வறட்டு கவுரவம் பார்க்காமல், வீண் பிடிவாதம் பிடிக்காமல் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். முத்தலாக் தடை சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறி உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் மாற்றம் வருமா? என்பதை, அவர் அரசியலுக்கு வந்த பிறகு பேசுவோம். ரஜினிகாந்த் சாதி, மத சார்பற்ற ஆன்மிக அரசியலை கையில் எடுப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் சாதி, மத சார்பற்ற ஜனநாயக அரசியலை தவிர்த்து ஆன்மிக அரசியல் என்று ஒன்றும் கிடையாது. ஆன்மிக அரசியல் என்றால் சாதியும், மதமும் இருக்கும். மதசார்பற்ற அரசியலை ரஜினிகாந்த் கையில் எடுப்பதாக தெரியவில்லை. ஆன்மிகம் என்ற மதவாதத்தை நிலைநாட்ட அவர் விரும்புவது தெரிகிறது. எனவே ரஜினிகாந்த்துக்கு பின்னால் மதவாத சக்திகள் இருக்கிறார்களோ? என சந்தேகிக்க தோன்றுகிறது.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு. அதைத்தான் கழகங்கள் இல்லாத தமிழகம் அமைப்போம் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர். தமிழகத்தில் எந்த சூழலிலும் மதவாத சக்திகள் காலூன்ற வாய்ப்பே இல்லை. அதற்கான சூழல் தமிழகத்தில் ஒருபோதும் அமையாது.

மக்கள் நலக்கூட்டணி என்பது கடந்த சட்டமன்ற தேர்தலுடன் முடிந்து விட்டது. அதன்பின்னர் அது செயல்படவில்லை. தி.மு.க.வுடன் மக்கள் நலக்கூட்டணியாக நாங்கள் சேரவில்லை. திராவிட ஆட்சியை மதவாத ஆட்சியால் சிதைக்க வேண்டும் என்ற முயற்சி தற்போது நடந்து வருகிறது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com