செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம், 10 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குஜிலியம்பாறையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம், 10 பேர் கைது
Published on

குஜிலியம்பாறை,

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிதாஸ் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அதற்கு முன்பாகவே போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணிதாஸ் உள்பட 10 பேரை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com